You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Secondary Grade Teacher Protest 2023 | இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

Tamil Nadu Teacher Protest Latest News

Secondary Grade Teacher Protest 2023 | இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

Secondary Grade Teacher Protest 2023

மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட சம வேலைக்கு சம ஊதியம் என்ற வலுவான கோரிக்கை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு, சென்னை பேராசிரியர் அன்பழன் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

31.5.2009ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதியத்தை 1.6.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று முழங்கி இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். பெண் ஆசிரியர்களும் பங்கேற்றனர். தகவல் அறிந்த கல்வித்துறை உயரதிகாரிகள் வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறும் வேண்டுகோள் வைத்தனர். இருப்பினும், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்ததால், உணவு, தூக்கமின்றி பல ஆசிரியர்கள் உடல்சோர்வுற்று, மயங்கிய நிலையில் அவசர ஊர்தி வாயிலாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காட்சியும் பதிவானது.

ஆசிரியர்கள் போராட்டம் தொடரவே, பல்வேறு அரசியல் கட்சியினர் அங்கு வருகை தந்து, அவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி சென்றனர். இந்த அரசு தங்களுக்கு பின்னடைவு என்று கருத தொடங்கியது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில், அகவிலைப்படி 38 சதவீதம் உயர்த்தி புத்தாண்டு பரிசு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தியும், ஆதரவும் இருந்தது. அதன் ஊடாகவே, அதன் அறிவிப்பில், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் - செலவினம் அவர்களின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது, அதில் தெரிவிக்கபட்டிருந்தது.

Read Also: அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்வு

இதைதொடர்ந்து, கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தி நடத்தினர், பின்னர் போராட்டம் திரும்ப பெறப்படுகிறது என்ற செய்தி ஊடகங்களில் வெளியானது. பல ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பில் பெரிய உடன்பாடில்லை என்றும், இந்த அரசு கொடுத்த குழு அமைக்கப்படும் என்ற, உறுதியை நம்பலாமா என்ற மிகப்பெரிய கேள்வி கணைகள் ஆசிரியர்கள் மண்டையில் நீச்சல் அடிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து போராட்ட ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ஒரு காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுக ஆட்சியை விரும்புவார்கள். கலைஞர் கருணாநிதியின் முன்னேற்ற செயல்பாடுகளாலும், ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை மலர செய்தததே இதற்கு காரணம். கடந்த ஆட்சிகாலத்தில், இதே ஆசிரியர்கள் இதே கோரிக்கை வலியுறுத்தி போராடும்போது, திமுக ஆசிரியர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்றது, திமுக ஆட்சிக்கு வரும்போது ஆசிரியர்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்ற உறுதியும் அளித்தது.

ஆனால், இன்றைய ஆட்சியின் செயல்பாடுகளால் ஆசிரியர்கள் பலர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். திமுக தனது தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, திமுக ஆட்சி மலர்ந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் உள்ளிட்ட பல முக்கிய தேர்தல் வாக்குறுதியை அளித்தது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. இரண்டாவது வருடத்தை நோக்கி செல்லும் இந்த ஆட்சி, அதற்கான எந்த முன்னெடுப்புகள் எடுக்கவில்லை, மாறாக, ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறுமா என்ற மிகப்பெரிய கேள்வி மனதில் எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான், இந்த போராட்டத்தை திசைதிருப்பும் வகையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை ஆராய குழு அமைப்போம் என்ற உறுதியை இந்த ஆட்சி அளித்துள்ளது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். கடந்த கால திமுக செயல்பாடுகளை ஆராயும்போது, சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கைக்கு, வாய்ப்பில்லை ராஜா என்ற சீமானின் வாசகம்தான் மனதில் மேலோங்கியுள்ளது. இவ்வாறு அவர் புலம்பினார்.