Law Course Details in Tamil
பொறியியல் மருத்துவத்துக்கு இணையாக சட்டப்படிப்புக்கும் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து நிலவுகிறது. தற்போது பன்முக வாய்ப்புகளை தரும் படிப்பாக சட்ட கல்வி மாறியிருக்கிறது.அறிவுசார் சொத்துரிமை, கார்ப்பரேட் சட்டம், சா்வதேச நிதிச்சட்டம், கடல்சார் சட்டங்கள் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பன்னாட்டு
நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகளில் திறமையான வழக்குரைஞர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
கார்ப்பரேட் அக்கவுண்ட்டிங், பிசினஸ் லா, டாக்ஷேசன், இண்டர்நேஷனல் டாக்சேஷன், கம்பெனி நிர்வாகம் போன்றவற்றில் திறமையான வழக்குரைஞர்களை பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன் காரணமாக சட்டப்படிப்புகளை பயிலுவதற்கு மாணவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
சட்டப்படிப்பு வகைகள்
பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.காம் எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.பி.ஏ., எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி (ஹானர்ஸ்) ஆகிய ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு, 3 ஆண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்), 5 ஆண்டு பி.ஏ.பி.எல்., 3 ஆண்டு பி.எல். முதுநிலையில் 2 ஆண்டு எல்.எல்.எம், ஆராய்ச்சி படிப்பு (பி.ஹெச்டி) ஆகிய சட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.
Law Colleges List in Tami Nadu
தமிழ்நாட்டில் டாக்டர்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, வேலூர், சேலம், கோவை, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 14 அரசு சட்டக் கல்லூரிகளும், திண்டிவனத்தில் சரஸ்வதி தனியார் சட்டக் கல்லூரியும் செயல்படுகிறது. இவற்றில் மொத்தம் 1,731 இளநிலை பட்டபடிப்புக்கான இடங்கள் உள்ளன.
Law College Admission Details in Tamil
பிளஸ்2 தேர்ச்சியுடன் 45 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமலும் பெற்றிருக்கும் மாணவர்கள் இளநிலை சட்டம் படிக்க தகுதியானவர்கள். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினா்கள் என்றால் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் . பிளஸ்2 தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயின்றவர்களுக்கு 4 சதவீத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்கும் மாணவர்கள் கலந்தாய்வு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்.
சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு
அதே நேரம் நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு (கிளாட்) எழுத வேண்டியது அவசியம். இந்த மதிப்பெண் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். சில கல்வி நிறுவனங்கள் நுழைவு தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண்களில் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
சட்டப்படிப்பு வேலைவாய்ப்பு
வழக்குரைஞர்கள், நீதிபதிகளின் வாரிசுகளே அதிக அளவில் சட்டம் பயின்ற நிலை மாறி, முதல் தலைமுறை சட்ட மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதத்தை எட்டியிருப்பதாக கூறுகிறார்
சாஸ்த்ரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் சாஸ்த்ரா சட்டவியல் பள்ளியின் உதவிபேராசிரியர் சங்கீதா.சட்ட படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் பரவலாகி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் , தனியார் பெரு நிறுவனங்களில் சட்ட ஆலோசகர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் சட்ட பிரிவுகளை தொடங்கியுள்ளன.அதேபோல் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளிலும் சட்ட வல்லுநர்களுக்கான தேவை அதிகாித்துள்ளன. இதனால் வாய்ப்புகள் பெருகியிருப்பதால் சட்டப்படிப்பு மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது. அத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அரசு சட்ட கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்களிலும் ஆசிரியர் வாய்ப்பை பெற முடியும் என்கிறார் அவர்.
இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் வழக்காடும் பணிக்கு செல்லவே விரும்புகின்றனர். இப்பணியில் தொடக்க நிலையில் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு ஊதியம் கிடைக்காது. இருந்தாலும் கூட, இப் பணியை தேர்ந்தெடுக்கவே மாணவர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.அக்காலத்தில் மூத்த வழக்குரைஞர்களில் அனுபவம் பெறுவதற்காக சில ஆண்டுகளுக்கு ஊதியம் இன்றி பணியாற்றும் நிலை இருந்தது. ஆனால், இப்போது உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்களிடம் இளநிலை வழக்குரைஞர்களாக பணியில் சேருபவர்களுக்கு மாதம் ரூ 15 ஆயிரம் ஊதியம் கிடைக்கிறது.
எனவே, பணியில் நீடித்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் முன்பை விட அதிகமாக உள்ளன. இதுவே, நிறைய மாணவர்களுக்கு வழக்காடு பணி மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. அதேபோல் முன்பு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்டம் பயிலுவதற்கு மாணவர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டியதில்லை.ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் பட்டப் படிப்பு முடிப்பவர்கள் உடனடியாக எல்.எல்.எம் படிப்பதற்காக கேம்பிரிட்ஜ், ஸ்வீடன் போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு செல்கின்றனர் என்கிறார் அவர்.