CPS Protest 2022 | சிபிஎஸ் ரத்துசெய்யக்கோரி போராட்டம்
CPS Protest 2022
சிபிஎஸ் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3ல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மூ மணிமேகலை தலைமை வகித்தார்.
கூட்டப் பொருள்களின் மீதான மாநில நிர்வாகிகள் கூட்ட முடிவுகளை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் பேசினார்.
Read Also: சம வேலைக்கு சம ஊதியம் சாத்தியமா?
கூட்ட முடிவில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும், ஒன்றிய அரசு அறிவித்துள்ளவாறு 1.7.2022 முதல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும், பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ள உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு கல்வித்துறை உடன் ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்கிட வேண்டும், ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் , நடுநிலை பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் முன் பருவ பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி நவம்பர் 3ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தா்ணா போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.