புதிய தேசிய கல்விகொள்கை 2020ன்படி பாடத்திட்டங்களை புதுப்பிக்க வேண்டும் என, பல்கலைகளுக்கு, யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
யுஜிசி செயலர் மணீஷ் ஜோஷி அனுப்பிய சுற்றறிக்கை, கருத்தியல், கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றால், உலகம் அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் அனைத்தும், மறு வடிவமைக்கப்பட்டு, சிறிது காலத்திலேயே மேம்படுத்தப்படுகின்றது. அதன் வேகத்திற்கு ஏற்ப, நம் கல்வி முறைகளும் இருக்க வேண்டியது அவசியம். தேசிய கல்விக்கொள்கை, 2020ஆனது, பாடத்திட்டத்தின் விரிவான மாற்றத்தைும், வலுவான மாற்றங்களையும் வரவேற்கிறது. கல்வியை முழுமையானதாகவும், நெகிழ்வாகவும், 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்றுவதையும் வலியுறுத்துகிறது. பாடங்களை மனப்பாடம் செய்வதில் இருந்து விடுபட்டு கருத்தியலை புரிந்து கொள்வது, விமர்சனம் செய்யும் அளவுக்கான சிந்தனையை வளர்ப்பது அவசியம். அதற்கேற்பவும், படைப்பாற்றல் மற்றும் பலதரப்பட்ட கற்றல், அனுபவமிக்க நடைமுறை கற்றலை மேம்படுத்துவதாகவும், பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டு, உங்கள் பல்கலைக்கழகங்கள், இணைப்பு கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து பாடங்களையும் மீண்டும் மதிப்பாய்வு செய்து, புதிய கல்வி கொள்கைக்ககு ஏற்ப திருத்தி, உடனடியாக செயல்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.