TN School Education Department Scam | கல்வித்துறையில் முறைகேடு
TN School Education Department Scam
ஒரு புறம் கொரோனாவால் பள்ளி மூடப்பட்டு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மெல்ல, மெல்ல சிதைந்து வரும் நிலையில், மறுபுறம் கல்வித்துறையில் முறைகேடு தொடர்வது ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதையே உணர்த்துகிறது.
மக்களின் வரிப்பணத்தை கொண்டு, அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக, அவர்களது மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் தீட்டினாலும், இது முறையாக சென்று சேராமல், வீணாகி வருகிறது. காரணம், ஆட்சியாளர்களும், அதிகாரிகளின் சுரண்டல்தான். நாம் கல்வியில் முன்னேறிய மாநிலம் என்று கூறிக்கொண்டாலும், இன்னும் வேகமாக முன்னேறாமல், ஆமை வேகத்தில் மெதுவாக நகர்கிறது.
கல்வித்துறையில் முறைகேடு
தற்போது, கடந்த ஆட்சியில் நடந்ததே போன்று, இந்த ஆட்சியில் தரமற்ற விளையாட்டு பொருட்கள் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் விநியோகம் செய்யப்படுகிறது.
Also Read: வாலாட்டும் வட்டார கல்வி அலுவலர் – கட்டிங் கொடுத்தால்தான் மனுக்கள் நகரும்
மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் பெற தொடக்க பள்ளிகள் ரூ.5000, நடுநிலை பள்ளிகள் ரூ.10,000 பள்ளி பராமரிப்பு நிதியிலிருந்து பயன்படுத்த வேண்டும் கல்வி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. விதிகள் படி, இதுபோன்ற பொருட்கள் வாங்க, பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, தலைமை ஆசிரியர்கள் தரமான பொருட்களை கடைகளில் நேரடியாக வாங்க வேண்டும். ஆனால், சேலம் மாவட்டத்தில், கல்வி அதிகாரிகள் உத்தரவின்பேரில், தற்போது பல அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு தரமற்ற பொம்மை விளையாட்டு பொருட்கள் தனியார் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் plastic cricket ball, Soft Ball (Small), Tennis Ball, Basket Ball, Shotput உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.4949. இதில் நான்கு விளையாட்டு பொருட்களான Saucer Cone 10 * 10 = 100, multi-colored Parachute 550* 1 = 550, Foot Pump 640 * 1 = 640, Foam Javelin 150 *1 = 150 வழங்கப்படவில்லை. நான்கு பொருட்களின் மதிப்பு ரூ. 1,440 ஆக உள்ளது. இதுதவிர, விலை மதிப்பு பட்டியலில் ரூ.51 குறைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ரூ.5,000 மதிப்பிலான பொருட்களில் ரூ 1500க்கான பொருட்கள் வழங்கப்படாமல் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் என்றால், இதனை கண்டுகொள்ளாமல் இருக்க கூட்டு கொள்ளையாக தலைமை ஆசிரியர்களுக்கு தலா ரூ ஆயிரம் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமை ஆசியர்களுக்கு ஆயிரம் என்றால், மாவட்ட, மாநிலத்தில் இருக்கும் கல்வி அதிகாரிகளுக்கு எவ்வளவும் கப்பம் கட்டப்படுகிறது என்பது தெரியவில்லை விவரம் அறிந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர். பழைய ஆட்சியில் இந்த நிலை என்றால், புதிய ஆட்சியிலும் இதே நிலைதான் தொடர்கிறது என ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது, தரமற்ற பொருட்களை கொண்டு மாணவர்கள் விளையாடும்போது, அதன் ஆயுட்காலம் அரை மாதத்திற்கு கூட தாக்க பிடிக்க முடியாது. Foot Pump இல்லாமல், எப்படி பந்துகளுக்கு காற்று நிரப்ப முடியும், பஞ்சர் கடைகளுக்கு சென்றுதான் காற்று நிரப்ப முடியம். தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்கும், இவர்களின் பிள்ளைகளுக்கு இதேபோன்று விளையாட்டு பொருட்களை கொண்டு விளையாட வைத்தால், அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?. அரசு பணம், ஏழை மாணவர்கள் என்பதனாலயே இவ்வளவு அலட்சியபோக்கு.
மக்கள் வரிப்பணம் வீணடிப்பு
இப்படி வரிப்பணத்தை நூதனமாக திருடி அவரவர் வீட்டிற்கு எடுத்து சென்றால், அரசு பள்ளி எப்படி தரம் உயரும், அரசு பள்ளி மாணவர்கள் எப்படி திறமை வளரும் என்பதே பிரதானமான கேள்வியாக உள்ளது. தற்போது இருக்கும் ஆட்சி ஊழல்களுக்கு எதிரான ஆட்சி என நம்ப துவங்கும் நிலையில், இதுபோன்று கூட்டு கொள்ளை தற்போது தொடங்கியிருப்பது எங்களை போன்ற கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளி வளம் பெற, இதுபோன்ற கூட்டு கொள்ளை அடிப்பவர்கள், கூட்டு கொள்ளைக்கு துணையாக இருக்கும் கல்வி அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, பணியிலிருந்து நீக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை முழுமையான விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசு நிச்சயம் செய்யும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
