ஆண்டு இறுதித்தேர்வின்போது வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தால், சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடக்க கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுபப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான தேர்வு ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த 2ம் பருவத்தேர்வின் போது, சில மாவட்டங்களில் தேர்வு நடக்கும் முன்பே விடைக்குறிப்புகளுடன் வினாத்தாள் ஆசிரியர்கள் வழியாக சமூக ஊடகங்களில் பொது வெளியில் பரவியது. சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது நடக்கவிருக்கும் ஆண்டு இறுதி தேர்வுகளின்போது, தேர்வுக்குரிய வினாத்தாள்களை எமிஸ் தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வினாத்தாள்கள் தோ்வுக்கு முன்பாக வெளியாகாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஆண்டு இறுதித்தேர்வின்போது வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தால், சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது ஒழுங்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.