தமிழகத்தில் உள்ள அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஆசிரியர் காலிபணியிடங்கள் உள்ளன. இந்த வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தகுதிவாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை இந்த கல்வியாண்டில் நியமனம் செய்யலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் ஆறு மாதத்திற்கு மேல் நீண்ட விடுப்பில் இருந்தாலும், மகப்பேறு விடுப்பில் இருந்தாலும், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் 2ம் தேதி முதல் பள்ளிகளில் தொடங்க உள்ளது. எனவே, ஆசிரியர் பட்டதாரிகள் அருகில் உள்ள பள்ளிகளை அணுகி, காலிபணியிடங்கள் உள்ளதா என அறிந்து அந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.