கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை பாதுகாப்பாக கழிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜூன் 2ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சென்னை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் பொது தேர்வு எழுத உள்ள 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர்கள் புகார் அளித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும், நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிகல்வித்துறை எச்சரித்துள்ளது.