இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2,500 கோடி கல்வி கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற பிரிவில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டின் திறன் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்றும், ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்படும் என்றும், அமைச்சர் அறிவித்தார்.