சமீபத்தில் பள்ளி கல்வித்துறையின் மானியக்கோரிக்கையில் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு இடம்பெறாததால், முன்பருவ கல்வி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பருவ கல்வி ஆசிரியர்கள் 2381 அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மழலையர் பிரிவு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ஊதியம் 5 ஆயிரம் மட்டுமே. கடந்த சில மாதங்களாக, இவர்களுக்கான ஊதியம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து, இவர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, கடந்த டிசம்பர் மாதம், பள்ளி கல்வி அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தினர். மேலும், ஆசிரியர் மனசு திட்டம் சார்பில், அவர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பு, மானியக்கோரிக்கையில் இடம்பெறும் என உறுதி அளிக்கப்பட்டது.இதுதொடர்பாக, ஆசிரியர் ஒருவர் நம்மிடம் கூறும்போது, இந்த மானியக்கோரிக்கை முன்பு, அரசாணையின் படி, பணி நேரம் காலை முதல் மதியம் வரை, மாதம் முதல் தேதியில் சம்பளம், ஆசிரியர்கள் பெயர் விவரம் உள்ளிட்டவை எமிஸ் இணையதளத்தில் உறுதி செய்தல் உள்ளிட்ட தற்போது செயல்முறைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இவைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான்.ஆனால், ஊதிய உயர்வு இல்லாததது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ரூ 5 ஆயிரம் வைத்துக்கொண்டு எப்படி எங்கள் குடும்பத்தை நடத்துவது, கடன் கட்டுவது. மேலும், பணி நியமனம் பெற்ற நாளில் இருந்து ஒரு ஊதிய உயர்வு கூட தமிழ்நாடு அரசு அறிவிக்கவில்லை. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது எங்களுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.