You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை கல்வித்துறைக்கு அடுத்த சிக்கல்

RTE admission latest news in Tamil Nadu

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்த மறுத்த தமிழக அரசை கண்டித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை 'சமக்ரா சிக் ஷா' திட்டத்திலிருந்து நீக்குவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை என்பதை காரணமாகக் கூறாமல், இந்த சட்டத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கான நிதியை மாநில அரசே வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பள்ளிகள் தொடங்கி ஒரு மாதம் முடிவடையும் நிலையில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறாததை எதிர்த்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈசுவரன், தமிழக அரசிற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும் மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டம் செயல்பட்டதாக அரசு கூறிவருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. எனினும், பள்ளிகள் தொடங்கி ஒரு மாதமாகும் நிலையில், இன்னும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இது ஏழை மாணவர்களின் கல்வியை நேரடியாக பாதிக்கும் ஒரு நடவடிக்கை. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயல் இது. தமிழக அரசின் மெத்தனப்போக்கை இது வெளிக்காட்டுகிறது. அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.