தனியார் பள்ளி கல்வி கட்டணம் – மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே அனுப்ப அதிகாரம் உண்டா?
ஆங்கில மோகம், தரமான கல்வி மற்றும் சிறந்த கட்டமைப்பு என்ற மாயை உள்ளிட்ட காரணங்களால் பெற்றோர் குழந்தையை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புகின்றனர். அந்த அளவில்தான், தமிழக அரசும் அரசு பள்ளியை பராமரித்து வருகிறது என்பது வேறு ஒரு விஷயம். குறிப்பு ஒரு சில அரசு பள்ளிகளை தவிர.
தனியார் கல்வி கட்டணம்
கல்வி கட்டண நிர்ணய குழு, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் என்ன கல்வி கட்டணம் பெற்றோரிடம் வசூலிக்க வேண்டும் என்று கட்டணம் நிர்ணயம் செய்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் இந்த பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூல் செய்கிறதா, இல்லையா என்பதை கண்காணிக்க வேண்டும். கடையில் இருக்கும் பொம்மை போன்று அசைவு இல்லமால் இந்த அமைப்புகள் இருப்பது வேதனைக்குரிய விஷயம் என்றும் கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கல்வி கட்டணம் நிர்ணயம் செய்தாலும், தனியார் பள்ளிகள் விதிகள் மீறி அதிகபட்சமாக மூன்று முதல் ஐந்து மடங்கு வரை கூடுதல் கட்டணம் பெற்றோரிடம் வசூல் செய்வது சர்வசாதரணமாக சமுதாயத்தில் உள்ளது.
READ ALSO THIS | அரசு விடுதியில் சேர ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்?
தனியார் கல்வி கட்டணம் கண்காணிப்பதில் குளறுபடி
இதை கண்காணிக்க வேண்டிய மெட்ரிக் பள்ளி அதிகாரிகள், மக்கள் வரிப்பணம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், அப்பாவி பெற்றோர்கள் கடும் பாதிப்புகுள்ளாகின்றனர். அவர்களும், நம்ம இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கணுமுடா என்ற சினிமா வசனம் போல், கட்டணம் கொள்ளை குறித்து பேச முன் வருவதில்லை. மகன், மகளின் கல்வி பாழாய் போகிவிடும் என்ற ஒரு பயமும், தனியார் பள்ளிகள் குழந்தைகளை தொல்லை செய்வார்கள் என்ற அச்சமும் கூட. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளோ, எழுத்து வடிவில் புகார் அளித்தால் மட்டுமே நாங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று வீரவசனம் பேசுவார்கள். எதார்த்ததில் இவர்கள் டம்மி துப்பாக்கிகள்தான், ஆனால் வசூல் வேட்டையில் தனியார் பள்ளிகளிடம் கறார் ஆக இருப்பார்கள் என்பது வேறு ஒரு தனிக்கதை. பல தனியார் பள்ளிகள் பணத்தில்தான் கல்வி அதிகாரிகள் வாகனம் இயங்குகிறது என்பது கூடுதல் தகவல். இந்த அசட்டு தைரியம்தான் தனியார் பள்ளிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கடமைக்காக, ஒத்தை ரூபாய் புரயோஜனம் இல்லாத விளக்க நோட்டீஸ் கேட்பார்கள், அதனை தனியார் பள்ளிகள் எளிதாக டீல் செய்வார்கள். இதுதான் இன்றைய கல்வித்துறையின் கவலை நிலை.
கல்வி கட்டணம் செலுத்த தவறினால் மாணவர்களை வகுப்புவிட்டு வெளியே அனுப்ப முடியுமா?

சரி இந்த விஷயத்தில், கல்வி கட்டணம் மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே அனுப்ப தனியார் பள்ளிகளுக்கு அதிகாரம் உண்டா? என்ற பொதுவான கேள்விக்கு தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் அவரது செயல்முறைகள் மூலம் ஒரு விளக்கம் கிடைத்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே அமர வைத்திருப்பதாக பகரி மூலம் பகிரப்பட்டுள்ளது என்றும், எந்த சூழ்நிலையிலும் இது போல கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் அவர்களை வெளியில் அனுப்புவதும், பெற்றோர்களை தரக்குறைவாக பேசுவதும், அடிப்படை கல்வி உரிமையை மறுக்கின்ற செயலாகும் என்றும் தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் மேற்கண்டவாறு கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அனுப்பப்பட்டனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, மேற்படி நிகழ்வு போல் இனி வரும் காலங்களில் எந்தவொரு மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு பள்ளி நிர்வாகத்திற்கு தக்க அறிவுரைகள் வழங்கி, அதனை அவ்வப்போது செயல்படுத்துவதை பள்ளி ஆய்வின் போதும், பள்ளி பார்வையின் போதும் மாவட்ட ஆய்வு அலுவலர்கள் ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததாக புகார் ஏதும் பெறப்பட்டால், அதன் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது சார்ந்து அவ்வப்போது, இந்த இயக்ககத்திற்கு தவறாமல் அறிக்கை அனுப்பிடவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் திட்டவட்டமாக தெரிகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளை பெற்றோர்களாகிய நீங்கள் சந்தித்தால் இந்த வழியில்முறையிவ் அணுக முயலுங்கள்.