You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Partial Solar Eclipse 2022 | பகுதி சூரிய கிரகணம் இன்று எப்போது தெரியும்?

Partial Solar Eclipse 2022

Partial Solar Eclipse 2022 | பகுதி சூரிய கிரகணம் இன்று எப்போது தெரியும்?

Partial Solar Eclipse 2022

தமிழ்நாட்டை பொறுத்தவரை மாலை 5.15 மணிக்கு கிரகணம் துவங்குகிறது. 5.45 மணிக்கு உச்சத்தை அடைகிறது. கிட்டத்தட்ட 5.55 மணி அளவில் கிரகணம் முடிவடைகிறது. நிலவு பூமியை சுற்றி வருவதால் கிரகணம் தெரியும் நேரம் இடத்திற்கு இடம் சிறிது மாறுபடும். அதேபோல பூமி சுழல்வதால் சூரியன் மறையும் நேரமும் இடத்திற்கு இடம் மாறுபடும். கோவையில் கிரகண நேரம் மாலை 5.18 மணிக்கு துவங்கி 5.52 மணிக்கு உச்சத்தை அடைந்து முடிவடைகிறது. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மாலை 5.15 மணிக்கு மேல் பகுதி சூரிய கிரகணம் புலப்படும். நிமிட நேரங்கள் வேறுபடலாம்.

Read Also: சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்வு

கிரகணம் என்றால் என்ன?

சூரிய ஒளியால் ஒரு வான் பொருளின் நிழல் மற்றொரு வான் பொருளில் விழுவதை கிரகணம் அல்லது மறைப்பு என்கிறோம். கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு தான். சூரியனை மறைத்து நிலவின் நிழல் பூமியில் விழும்போது சூரிய கிரகணம் ஏற்படும்.

சூரிய கிரகணம் பார்க்கும் போது பாதுகாப்பு கண்ணாடிகள் அணிய அறிவுறுத்துவது ஏன்?

சூரியனில் இருந்து வரும் நேரடி கதிர்கள் மிகவும் பிரகாசமாகவும், வெப்பமாகவும் இருப்பதை அறிவோம். நமது கண்களின் உணர்வு உறுப்பான விழித்திரையில் உள்ள கூம்பு மற்றும் குச்சி செல்கள் குறைந்த மற்றும் தேவையான அளவிலான வெளிச்சத்தில் பார்க்கவும், மூளைக்கு கடத்தவும் அதன் மூலம் உருவங்களை பார்க்கவும் உதவுகின்றன. ஆகவே பிரகாசமான நேரடி ஒளிக்கதிர்களை பார்ப்பதால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே சாதாரண நாட்களிலும் சரி கிரகண நாட்களிலும் சரி பாதுகாப்பான சூரிய வடிகட்டி கண்ணாடி (solar filter glass) அணிந்து பார்ப்பதே  நல்லது.

கிரகணம் அன்று கண்களை பாதிக்கும் கதிர்கள் சூரியனில் இருந்து வருகிறதா?

இல்லவே இல்லை. சூரியனை வெறும் கண்ணால் தொடர்ந்து பார்க்க கூடாது என்பது கிரகண தினத்தன்று மட்டும் பொருந்தும் எச்சரிக்கை இல்லை. எல்லா நாட்களிலும் சூரியனை வெறும் கண்ணால் நீண்ட நேரம் பார்க்க கூடாது. எடுத்துக்காட்டாக, பிரகாசமான வெளிப்புற நடைபயணத்தில் இருந்து திடீரென ஒரு இருண்ட அறைக்குள் செல்லும் போது ஒரு தற்காலிக குருட்டுத்தன்மையை நாம் அனுபவிக்க முடியும். சாதாரண நாட்களில் நமக்கு சூரியனை பார்ப்பதற்கான ஆவல் இருக்காது. ஆனால் கிரகணத்தன்று சூரியனை காண ஆவல் இருக்கும் எனவே கிரகணத்தன்று மட்டும் எச்சரிக்கை செய்யப்படுகிறது.

கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?

சூரிய ஒளியின் அளவை கட்டுப்படுத்தும் சூரிய வடிக்கட்டி கண்ணாடிகள் பயன்படுத்தலாம். சூரிய  பிம்பத்தை ஊசித்துளை கேமரா pin hole camera வழியாகவோ, ஒரு ஜல்லி கரண்டியின் நிழலை தரையில் விழும்படி செய்தோ பார்க்கலாம். சிறிய கண்ணாடியின் மூலம் சூரியனின் பிம்பத்தை சுவரில் விழச்செய்து காணலாம்.

கிரகணங்களின் போது ஏதாவது மர்மக்கதிர் வெளியாகுமா?

கிரகணம் என்பது வெறும் நிழல் சார்ந்த பார்வை விசயம் மட்டுமே. சூரியனில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை. சூரிய ஒளியை மறைக்கும் மரம் எப்படி நிழலை ஏற்படுத்துகிறதோ அதுபோல சூரிய ஒளியை மறைத்து நிலா நிழலை ஏற்படுத்துகிறது. இதில் மர்மக்கதிர் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை.

கிரகண நேரத்தில் வெளியில் செல்வது ஆபத்தானது என்று கூறுவது அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருந்தாதது. வெளியில் செல்லலாம் தவறில்லை.

கிரகண காலத்தில் உணவு விஷமாக மாறும் என்ற கருத்தும் தவறான ஒன்றே. சமைத்த உணவு கெட்டுப்போகும் என்றும், விஷமாக மாறும் என்பதும் பொய். எந்தவித ஆதாரமும் இல்லாத கருத்து. கிரகண நேரத்தில் எந்த உணவையும் சாப்பிடலாம்.

கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே செல்வதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து என்று நமது சமூகத்தில் பெரும்பாலும் நம்பப் படுகிறது. இதுவும் தவறான கருத்தே. பல நாடுகளில் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான முறையில் ரசிக்கின்றனர். 

மேலும் இந்த இணையத்தில் கிரகண நேரம், கிரகண தன்மை குறித்த தகவல்களை அறிய முடியும்.

பகுதி சூரிய கிரகணத்தை பாதுகாப்பான முறையில் கண்டுகளிப்போம்...

நன்றி..

  • பேரா.க.லெனின்பாரதி,
  • அறிவியல் கருத்தாளர்,
  • இயற்பியல் பேராசிரியர்,
  • ஒருங்கிணைப்பாளர், SNMV science club affiliated to Vigyan Prasar, Govt of India 
  • மேலும் தகவல்களுக்கு...
  • Contact:8523909178