Maharaja government aided school Theni
தேனியில் தலைமையாசிரியரை தாக்கியதோடு மட்டுமின்றி, மாணவ, மாணவியரை தாளாளர் வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.தேனி சுப்பன் தெருவில் பகுதியில் அரசு உதவிபெறும் மஹாராஜா தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தாளாளர் அன்பழகன் (55). தலைமையாசிரியர் சென்றாயபெருமாள், ஒரு ஆசிரியை அப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர 31 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தாளாளர், தலைமை ஆசிரியருக்கு இடையே பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தது. கடந்த 11ம் தேதி மதியம் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளுடன் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கினர். பின்னா் மாணவ, மாணவிகளை வெளியேற்றி பள்ளியை பூட்டி சென்றார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. புகாரின்பேரில், போலீசார் அன்பழகன் மீது முன்ஜாமீன் கிடைக்காத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள தாளாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி கலெக்டர் ஷஜீவனா உத்தரவுப்படி நேற்று பள்ளிக்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர்.