Library Activities in Tamil வாசிப்பு இயக்கம் பள்ளிகளில் துவக்கம்
பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாணவர்கள் இடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலக பாடவேளை வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்பு திறனையும் படைப்பு திறனையும் வளர்த்து கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை திட்டங்களை தீட்டியுள்ளது.
Library Activities in Tamil
இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8,9-10,11-12 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களில் இருந்து வாரம் ஒன்று வழங்கப்பட வேண்டும். அவர்களை அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பி தந்துவிட்டு, அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம். படித்த நூல் குறித்த விமர்சனம் எழுதலாம். அதை வைத்து ஓவியம் வரையலாம், நாடகம் நடத்தலாம், கலந்துரையாடலாம், நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு, மேற்கொள்கள் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல், குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் இதுபோன்ற படைப்புகள் சேகரித்து வைக்கப்படும்.
சிறந்த படைப்புகளை தந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர். அதில் வெற்றிபெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். இறுதி தேர்வு செய்யப்படுபவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள். இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளா்கள் மற்றும் எழுத்தாளர்களை கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த நாட்களில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும். மேலும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவ பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றன. முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இடையில் நடக்கும் இப்போட்டியில் வெல்வோர் அறிவு பயணம் என்கிற பெயரில் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்படும். இந்த பயணத்தில் உலக புகழ்பெற்ற நூலகங்கள், ஆவண காப்பகங்கள் போன்றவற்றை காணலாம்.
இந்த திட்டத்தை 17.8.2022 அன்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலை பள்ளியில் நடக்கும் நிகழ்வில் துவக்கி வைக்கிறார்.
வாசிப்பு இயக்கம்
பள்ளி நூலகங்களையும், பாட வேளைகளையும் முறையாக பயன்படுத்தவும் அவற்றின் பயன்பாடு மாணவர்களை நன்கு சென்றைடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் ஏற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.