தேசிய கல்விக் கொள்கை 2020-ன் தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் - கல்வி மேம்பாட்டுக்குழு கோரிக்கை
கல்வி மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் க.லெனின்பாரதி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தேசிய கல்விக் கொள்கையின் உள்ளூர் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பை 17 மொழிகளில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் மொழிபெயர்ப்பு இடம் பெறவில்லை.
தேசிய கல்விக் கொள்கை 2020
கடந்த 2016-ல் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. இதற்கிடையே 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதுவே தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, மற்றும் 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காக பாடமுறை மாற்றப்படும். மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும். 6-ம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கான பிராந்திய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது.
கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. எனினும் இதில் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை. எனவே மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக தமிழ் மொழியில் கல்விக்கொள்கையை வெளியிட வேண்டும் என கல்வி மேம்பாட்டு குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.