Read Also: TNPSC Free Coaching in Dharmapuri
குரூப் 1 தேர்வுக்காக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணிக்கு தொடங்கி தேர்வு நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. விண்ணப்பித்திருந்த 3.32 லட்சம் பேரில் 1,90,957 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை. கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்காக 2.56 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 1.31 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையில் இருந்து 50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குட்பட்ட தேர்வர்களே தேர்வு எழுதி வருகின்றனர். இதில் நேற்று நடந்த தேர்வில் வினாத்தாளை படித்து அதற்கு பதில் அளிக்க போதிய நேரம் இருக்கவில்லை என தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்வுக்காக 140 பக்கங்கள் அடங்கிய 200 கேள்விகள் பெரிய பத்திகளை கொண்டு இருந்ததால், அதனை படித்து புரிந்து கொள்வதே சிரமமாக இருந்ததாக தேர்வர்கள் வேதனை தெரிவித்தனர். வினாக்கள் படித்து புரிந்துகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகவும், இதனால் முழுமையாக அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க முடியவில்லை எனவும் தேர்வர்கள் புலம்பினர். மேலும் புரா எனப்படும் கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தின் விரிவாக்கம் கேள்வியாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு உரிய வாய்ப்புகளில் சரியான பதில் இடம்பெறவில்லை என தேர்வர்கள் கூறினர். இதேபோன்று, யூனியன் பிரதேசம் தொடர்பான ஒரு கேள்விக்கும் உரிய முறையில் வாய்ப்புகள் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.