போக்சோ புகார் அளிக்கவிடாமல் தடுத்து, மிரட்டிய ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை பள்ளி மாணவி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தாா்.
கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குற்பட்ட ஒரு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார். இவர் மீது மாணவி ஒருவர் அளித்த பாலியல் தொந்தரவு புகார் அடிப்படையில் போக்சோ வழக்கின் கீழ், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் புகார் அளிப்பதற்கு முன்பு, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தலைமையாசிரியர் ஜீவாஹட்சனிடம் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோருடன் சென்று புகார் அளித்தார். அப்பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்களிடமும், உடற்கல்வி ஆசிரியர் குறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் யாரும், உரிய உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கண்டிக்காமல், பாதிக்கப்பட்ட மாணவியை, புகார் அளிக்கவிடாமல் மிரட்டியதாகவும், திட்டியதாகவும் காவல்துறையினரிடம் மாணவி வாக்குமூலம் அளித்தார். இருப்பினும், மிரட்டிய 10 ஆசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், தன்னை மிரட்டிய அனைத்து ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டபோது, புகார் மனு பற்றி விசாாிக்கப்படும், என்றார்.