இலவச, லேப்டாப் வழங்குவதாக சமூக வலைதளங்களில் மோசடி கும்பல் பரப்பும், போலி இணையதள இணைப்பில் மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் தமிழக பட்ஜெட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை பயன்படுத்தி சைபர் மோசடி கும்பல் போலி இணையதளங்களை உருவாக்கி, மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டி வருகிறது. உதாரணமாக, மாணவர்களுக்கு மடிக்கணினி ஆதரவு 2025 என்ற பெயரில், நடப்பு கல்வியாண்டில், 9.6 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழுங்குவதாக கூறி, சில நாட்களாக சமூக வலைதளங்களில் போலியான இணையதள லிங்க் அதிகம் பகிரப்படுகிறது. இதனால் மாணவர்களின் பெயர், கல்வி நிலை, அழைப்பு எண், மின்னஞ்சல் முகவரி, வங்கி கணக்கு எண் என அனைத்து விதமான தகவல்களை பெறுகின்றனர். பின் அவற்றை பயன்படுத்தி சைபர் குற்றங்களில் ஈடுபடவும், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடவும் வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளி கல்லூரி மாணவர்கள், போலி இணையதள லிங்க் அல்லது அழைப்புகளில் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என சைபல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது, மோசடி பேர்வழிகள் தாங்கள் திரட்டும் தகவல்களை விற்கவும், அதை பயன்படுத்தி வங்கி கணக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஹேக் செய்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே மாணர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். சைபா் மோசடியால் பாதிக்கப்படுவோர் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.