12ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் மதிப்பெண்கள் சரியான முறையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா. அருணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரோனா தொற்று காரணமாக 12ம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி, பெற்றோர் மற்றும் அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் கல்வி அமைச்சர் தலைமையில் கருத்துக்களை கேட்டறிந்து முதலமைச்சருக்கு தெரிவித்தார்.
இதில் இருவேறு கருத்துகள் தெரிவிக்கபட்டிருந்தாலும், இறுதியில் மருத்துவ குழுவினரையும் ஆலோசித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து முதல்வர் அவர்கள் உத்தரவிட்டார். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நன்றி பாராட்டு தெரிவித்தது.
ரத்து செய்தால், மாணவர்கள் கல்லூரியில் சேர எப்படி மதிப்பெண் வழங்க முடியும், குழப்பம் ஏற்படும் சிலர் கருத்து தெரிவித்தநிலையில் கூட, மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
பின்னர், அதற்கான கல்வியாளர்கள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் குழுவை அமைத்து ஏற்கனவே பள்ளிகளில் நடந்த தேர்வு அடிப்படையில், ஆய்வு செய்து மிக முக்கியமாக மதிப்பீடு செய்து யாருக்கும் எவ்வித குழப்பம் சந்தேகம் ஏற்படாத வகையில், மதிப்பெண் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அருமையான முறையை கையாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேர்த்தியான மதிப்பெண் வழங்கிய தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நன்றி கலந்த பாராட்டு தெரிவிக்கிறது.
இதேபோன்று, பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், மாநில இணையதள பொறுப்பாளர், செ.சு.சரவணகுமார் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
கொரோனா பெருந்தொற்று நீ நுண்மியிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை ரத்து செய்தும், இம்மாணவர்களது உயர்கல்வி பாதிக்காத வண்ணம் மதிப்பெண்கள் கணக்கீடு செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களின் தலைமையில் குழு அமைத்து அந்த குழு மிக சரியான முறையில் ஆய்வு செய்து மதிப்பெண்கள் கணக்கிட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், துறையின் அரசு முதன்மை செயலாளர், ஆணையர் மற்றும் மதிப்பெண்கள் கணக்கீட்டுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
இதேபோன்று, பல ஆசிரியர் சங்கங்கள் அரசின் மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.