தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் கோகிலபாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் சிலர் கோகிலபாண்டியன் மீது பாலியல் புகார் அளித்தனர். கடந்த 2016ஆம் ஆண்டு கணித ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற அமா்வில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் சத்துணவு அமைப்பாளர் நந்தியின் பெயரில் கோகிலபாண்டியனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து, ஆசிரியைகள் வனிதா மற்றும் ராமலட்சுமி ஆகியேர் பொய் புகார் அளித்தது உறுதியானது.மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில், கோகிலபாண்டியனுக்கு தற்காலிகமாக பணி நீக்கம், பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆண்டிப்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிந்த நிலையில், நீதித்துறை நடுவர் பாசில்முகமது தீர்ப்பளித்தார். அதில், மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகிய மூவருக்கும் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டணையும், மற்றொரு கல்வி அலுவலர் கணேஷ்க்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார். மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி மற்றும் ஹெலன் மெட்டில்டா ஆகிய 3 பேருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, பாதிக்கப்பட்ட கணித ஆசிரியர் ஆண்டிப்பட்டி ராஜகோபாலன்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.