ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்ரல் 23ம் தேதி வரை தடை நீட்டித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மக்கள் நலன்களை கருத்தில்கொண்டு, போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை தடைவிதித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமாறு, அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட், ஏப்ரல் 23ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து, அதுவரை போரட்டம் நடத்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது