கணினி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை அதிமுக 2026 தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதால் வேலையில்லா கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கணினி அறிவியல் பாடத்தை தொடக்க கல்வியில் இருந்தே கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தனர். கடந்த அதிமுக ஆட்சி இறுதி நேரத்தில் கணினி பாடம் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்த நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. பின்னர், திமுக ஆட்சியில் கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10ம் வகுப்பில் கொண்டு வரப்படும் என ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். நாளடைவில் இக்கோரிக்கை திமுக கண்டுகொள்ளவில்லை, பல போராட்டம் அரசியல் தலைவர்கள் மூலம் அழுத்தம் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், அவையாவும் கைக்கொடுக்கவில்லை. இதனால் பல ஆயிரம் வேலையில்லா ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.இந்த நிலையில், அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 106 வது புள்ளியில், வளர்ந்து வரும் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கிட, 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே உள்ள 5 பாடங்களுடன், கணினி அறிவியலை சேர்த்து ஆறு பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடம் திட்டம் மாற்றி அமைக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை தற்போது கணினி ஆசிாியர்கள் கொண்டாடிவருகின்றனர்.