மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு. இவர், பிஎஸ்சி (கணிதம்) படிப்பில் முதல், இரண்டாம் ஆண்டை முடித்துள்ளார். 3வது ஆண்டில் பிஏ (வரலாறு) முடித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு கடந்த 1995ல் மதுரை காமராஜர் பல்கலையில் பிஏ (வரலாறு) பட்டம் வழங்கப்பட்டது. பின்னர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட் முடித்தார். இதன்படி, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டார். 3 ஆண்டு படிப்பில், 2 ஆண்டுகள் ஒரு பாடமும், இறுதியாண்டு வேறு பாடமும் படித்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது. இதை எதிா்த்து பாபு தொடர்ந்த வழக்கில், பணி வழங்க வேண்டுமென தனிநீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வாணைய தலைவர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசாரித்தனர். தேர்வாணைய தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, நிா்ணயிக்கப்பட்ட படிப்பிற்கான தகுதியை விண்ணப்பதாரர் பெறவில்லை. 3 ஆண்டில் 2 பாடங்களை படித்துள்ளார். இதை பணிக்கான தகுதியாக கருதமுடியாது என வாதிட்டார். இந்த மனுவின் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தேர்வாணைய தரப்பு வாதம் ஏற்புடையது என்பதால் தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.