திருச்சி ரயில்வே காலனி, கல்லுக்குழி பகுதியை சேர்ந்த தம்பதியின் 14 வயதான மகன் திருச்சி பொன்மலைபட்டி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
மார்ச் 28ம் தேதி விடுதியில் தங்கி இருந்த மாணவர் மீது, பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், உடற்கல்வி ஆசிரியர் ராபின்சன் ஆகியோர் மாணவர் திருடியதாக கூறி, விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அறையில் அடைத்துவைத்து, கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. பயந்துபோன மாணவன் தனது பெற்றோரிடம் கூறவே, பொன்மலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக பெற்றோர் சமூகநலத்துறை மற்றும் கல்வித்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.