தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக் கேடானது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை, திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களின் அடிப்படை தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதிகள் கூட முறையாக இல்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக, தருமபுாி அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி முறையாக இல்லை என்பதால் அங்கு பயில்கின்ற 7000 மாணவ, மாணவிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தூய்மையற்ற கழிவறைகளும், பராமரிப்பற்ற குடிநீர தொட்டியையும் பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய்கள் பரவி, அடிக்கடி உடல்நல சீர்கேடும் ஏற்படுகின்றது. தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு அங்கு பயிலும் மாணவ, மாணவியர் வீதியில் இறங்கி போராட்டமும் நடத்தியுள்ளனர்.இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு, தங்களால்தான் தமிழ்நாடு முன்னேறியது என்றெல்லாம் பெருமை பேசும் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான முறையான கழிவறை மற்றும் தூய குடிநீர் வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது, இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும் என சீமான் எச்சாித்துள்ளார்.