உயர்கல்வித்துறையில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுமார் 4000 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும் என உயா்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு சிஎன் கல்லூரியை அவர் இன்று வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி உடன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் சிஎன் கல்லூரியை அரசு கல்லூரியாக்க முடிவெடுத்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அது ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த இடத்தில் ஐஏஎஸ் அகாடமி, உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நூலகம் அமைக்க முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார். அது சம்பந்தப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ய என்னை பணித்தார். அதன்படி இன்று ஆய்வு செய்து உரிய அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.உயர் கல்வி பொருத்தவரை தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடியாக திகழ முதல்வர் பல நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் கவர்னர் அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல் செயல்படுகிறார். சமீபத்தில் பல்கலைக்கழக மானிய குழு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அது மாநிலங்களுக்கு எதிராக உள்ளது. எனவே தமிழக முதல்வர் கேரளா ஆந்திரா முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். விரைவில் அதில் வெற்றி பெறுவோம். வரும் ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தகுதி தேர்வு செட் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அத்தேர்வு நடைபெறும். அதன் பிறகு பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணி நியமனம் சம்பந்தமான தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 4000 பேராசிரியர்கள் வரும் ஜூன் மாதம் நியமிக்க உள்ளோம். அதை தவிர 1000 கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கான சம்பளம் கூட முதல்வரால் உயர்த்தப்பட்டது.